சீக்கிரமே ஒரு பி.எஸ்.என்.எல் நெட் கனெக்ஷன் வாங்கிப் போடுங்க- ஸ்பீடு அதிகரிக்க போகுதாம்!
டெல்லி: மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தனது இணைய சேவையை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 மடங்கு அதிகமாக்கவுள்ளது.
இது தொடர்பாக பி.எஸ்.என்.எல் தரப்பில், "பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது நொடிக்கு 512kpbs வேகத்தில் இணையச் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், பிரதமரின் டிஜிட்டல் இந்தியா சேவையின் அடிப்படையில் தற்போதைய இணையச் சேவையின் வேகத்தை 4 மடங்கு அதிகமாக்கப்படவுள்ளது. அதன்படி, பிஎஸ்என்எல் இணையச் சேவை 2 mpbs வேகத்தில் வழங்கப்படும்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் நிறுவனம் புது வசந்தம் என்னும் சேவையை அறிமுகப்படுத்துகிறது. இந்த சேவையின்படி பி.எஸ்.என்.எல் ப்ரீ பெய்டு லைஃப் டைம் சிம் கார்டினை ரூபாய் 15 க்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த சிம் கார்டின் மூலம் 1000 நிமிடங்களுக்கு அழைப்புகளை இலவசமாக பேசிக் கொள்ளலாம். அதற்கான காலக்கெடு 3 மாதங்கள் ஆகும். மேலும், சிம் வாங்கிய முதல் 3 மாதத்துக்கு 0.8 பைசா மட்டுமே அழைப்புக்கான கட்டணமாக வசூலிக்கப்படும்.
சிம் வாங்கியதும், மாதம் ஒன்றுக்கு 25 இலவச எஸ்எம்எஸ் என முதல் 3 மாதங்களுக்கு அனுப்பிக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி, 50 எம்பி இணையச் சேவையை முதல் மாதம் இலவசமாக வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.