தனி நபர் வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.40,000 நிலையான கழிவு! பட்ஜெட்டில் அறிவிப்பு
Recommended Video
டெல்லி: மாத சம்பளம் பெறுவோருக்கு பெரும் வருமான வரி சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரே ஒரு சொற்ப சலுகை மட்டுமே பட்ஜெட் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதுதான் நிலையான கழிவு என்ற திட்டம்.
நிலையான கழிவு (Standard deduction) என்பது புதிய நடைமுறை கிடையாது. ஏற்கனவே அமலில் இருந்த ஒன்றுதான். 2006-07ம் நிதியாண்டு முதல்தான் இந்த நடைமுறை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தால் நீக்கப்பட்டது.
மீண்டும், நிலையான கழிவு திட்டம் வேறு வழியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீக்கப்பட்டது
முந்தைய நடைமுறைப்படி மொத்த வருவாயில் அதிகபட்சம் ரூ.30,000 என்பது நிலையான கழிவாக வழங்கப்பட்டது. அதற்கு வருமான வரி கணக்கு காட்ட வேண்டிய தேவை இல்லை. இன்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டுள்ள அறிவிப்புபடி, ரூ.40,000 நிலையான கழிவாக வழங்கப்பட்டுள்ளது.
ரூ.40,000 கிடைக்கும்
ஒரு தனி நபரின் சம்பளம் உள்ளிட்ட மொத்த வருவாயில் இருந்து இந்த ரூ.40,000 தொகையை கழித்துக்கொண்டு எஞ்சிய தொகைக்கு வரி செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பிரிவினருக்கும் பொருந்தும்
உதாரணத்திற்கு, ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.5.30 லட்சம் என்றால், இப்போதுள்ள வரி கட்டமைப்புபடி, அவர் 20 சதவீத வருமான வரி கட்ட வேண்டியுள்ளது. ஆனால், நிலையான கழிவு தொகை ரூ.40,000த்தை தனது மொத்த வருமானத்தில் இருந்து குறைத்துவிட்டால், அவரது ஆண்டு வருமானம் ரூ.4.90 லட்சமாக குறையும். அப்போது அவர் 5 சதவீத வருமான வரி கட்டும் பிரிவுக்குள் வந்துவிடுவார். அது அவருக்கு லாபம் தரும். ஆனால் அதில்தான் ஒரு ட்விஸ்ட் உள்ளது.
மெடிக்கல் செலவு ஆதாரம்
2006ம் ஆண்டுவரை, நிலையான கழிவு தொகைக்கு ஆதாரம் (ப்ரூப்) காட்ட வேண்டிய தேவையில்லை. ஆனால் இப்போது மெடிக்கல் செலவீனத்திற்கான ஆதாரம் அல்லது போக்குவரத்து செலவீன ஆதாரம் காட்ட வேண்டும். உதாரணத்திற்கு, ரூ.40,000த்திற்கான மெடிக்கல் பில் தொகையை காண்பித்து இந்த சலுகையை அனுபவித்துக்கொள்ளலாம். ட்விஸ்ட் என்று கூறனோமே அது என்ன தெரியுமா? ஏற்கனவே இருந்த மெடிக்கல் பில் மற்றும் பயணப்படி ஆகிய இரு சலுகைகளையும் பறித்துவிட்டே இந்த நிலையான கழிவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு பெரிதாக எந்த லாபமும் இல்லை.
வரி கட்டமைப்பில் மாற்றம் இல்லை
மத்திய அரசு பட்ஜெட்டில் மாத வருவாய் பிரிவினருக்கு கிடைத்த ஒரே சலுகை இதுதான் என சிலர் மகிழ்ந்து கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை. மாத சம்பளக்காரர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது இந்த பட்ஜெட். மற்றபடி வருமான வரி கட்டமைப்பிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரூ.2.50 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் பிரிவினருக்கு வரி கிடையாது என்பதும், ரூ.2.50 லட்சம் முதல், ரூ.5 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கு 5 சதவீதம் வரி, ரூ.5-10 லட்சம் வரையிலான பிரிவினருக்கு 20 சதவீத வரி, ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட வருவாய் பிரிவினருக்கு 30 சதவீத வரி என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.