இமாச்சலில் தாபா இடிந்து விபத்து.. 7 பேர் பலி, இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரம்
Recommended Video
சிம்லா: கனமழை காரணமாக இமாச்சல பிரதேச மாநிலம் சோலான் பகுதியில் இருந்த அடுக்குமாடி கட்டிட உணவகம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானதில், 6 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் உட்பட இதுவரை 7 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் சிம்லாவில் இருந்து சுமார் 55 கிமீ தொலைவில் அமைந்துள்ளது சோலான்.

சோலான் நகரில் குமர்ஹட்டி என்ற மலைப்பாங்கான பகுதி உள்ளது. இங்கு அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் அமைந்துள்ள பிரபல தாபாவிற்கு, ஏராளமான ராணுவ வீரர்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் இந்த தாபா அமைந்துள்ள கட்டிடம், நேற்று மாலை கண்ணிமைக்கும் நேரத்தில் சீட்டுக்கட்டு போல இடிந்து விழுந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

கட்டிடம் சரிந்து விழுந்த சமயத்தில் தாபாவினுள் 30 ராணுவ வீரர்கள் உள்பட 35-க்கும் அதிகமானோர் இருந்துள்ளனர். திடீரனெ கட்டிடம் சரிந்து விழுந்ததால், இடிபாடுகளுக்குள் அவர்கள் சிக்கி கொண்டனர். மதிய வேளைகளில் ராணுவ வீரர்கள் சாப்பிடுவதற்காக இங்கே வந்து செல்லும் நிலையில், மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குமர்ஹாட்டி - நஹன் சாலையில் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினரும் வரவழைக்கப்பட்டனர்.
படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் குமர்ஹட்டி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். தற்போது வரை மீட்கப்பட்டவர்களில் 6 ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இது பற்றி தகவல் தெரிவித்த சோலன் கமிஷனர் கே.சி.சமான், இதுவரை சுமார் 17 ராணுவ வீரர்கள் மற்றும் 11 பொதுமக்கள் மீட்கப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்து விடட்னர். கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் 7 ராணுவ வீரர்கள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இன்று பிற்பகலுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.












Click it and Unblock the Notifications