புர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் வங்கதேச தீவிரவாதி கைது: விசாரணையில் 'திடுக்' தகவல்கள்
கொல்கத்தா: புர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான வங்கதேச தீவிரவாதி சாஜித் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் புர்த்வானில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத்துல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் ஜமாத்துல் முஜாஹிதீனின் புர்த்வான் கிளை தலைவர் சாஜித் மேற்கு வங்க போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தீவிரவாதி ஜியா உல் ஹக்கின் கைதை அடுத்து சாஜித் கைது செய்யப்பட்டார். மதரஸாக்களில் இளைஞர்களை ஜிஹாத் இலக்கியங்களை படிக்குமாறு ஊக்கிவித்ததாக ஹக் மீது குற்றம் சாட்டப்பட்டது.
புர்த்வான் பிரிவுக்கு நான் தான் தலைவர் என்று சாஜித் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர். அவர் புர்த்வான் கிளை செயல்களில் தனது மனைவி பாத்திமாவையும் ஈடுபடுத்தியுள்ளார். சாஜித், பாத்திமா தவிர 12 தம்பதிகள் இந்த கிளையில் செயல்பட்டுள்ளனர். இந்திய பெண்களை திருமணம் செய்து கொள்ளுமாறு சாஜித் ஜமாத்துல் முஜாஹிதீன் தீவிரவாதிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அவர்கள் இந்திய பெண்களை மணந்தால் இங்கு எளிதில் குடியுரிமை பெற்றுவிடலாம்.
புர்த்வான் கிளையை பெரும்பாலும் தம்பதிகள் நடத்தவே சாஜித் விரும்புகிறார். மேலும் வங்கதேசத்தில் உள்ள ஜமாத்துல் முஜாஹிதீன் மத்திய குழுவுடன் தொடர்பில் இருந்தவர் சாஜித். புர்த்வான் கிளை துவங்கியதில் இருந்து அவர் கடந்த 4 ஆண்டுகளில் பல முறை வங்கதேசம் சென்று வந்துள்ளார்.
சாஜிதை தேசிய புலனாய்வுத் துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்த உள்ளது.