கர்நாடகாவில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 8 பேர் பலி
துமகூரு: கர்நாடக மாநிலத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம், திப்டூர் தாலுகா, பிதரகுடி அடுத்த கொன்னஹள்ளி கிராமம் அருகே இந்த விபத்து நடந்தது. திருவண்ணாமலையில் இருந்து கிளம்பிய கர்நாடக அரசு பேருந்து பெங்களூர் வந்து, அங்கிருந்து ஷிமொக்காவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து எதிர் திசையில் ஷிமொக்காவில் இருந்து பெங்களுருக்கு வந்து கொண்டிருந்த பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இதில் இரண்டு பேருந்துகளின் டிரைவர்கள் உட்பட 8 பேர் இறந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ்(30), திருவள்ளூரைச் சேர்ந்த சீனிவாஸ்(35) ஆகியோரும் அடங்குவர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துமகூரு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெங்களுரு நிமான்ஸ் மருத்துவமனை, ஹாசன், சித்பூர், திப்டூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications