ஜம்முவில் தீடீர் வெள்ளப்பெருக்கு: பேருந்து ஓடையில் சிக்கியதில் 50 பேர் பலி?
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஓடையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பேருந்து ஒன்று அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அந்தப் பேருந்தில் திருமண விழாவிற்கு சென்றிருந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் இருந்ததாக அஞ்சப் படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ரஜோரி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து நீரில் அடித்து செல்லப்பட்டது.
விபத்துக்குள்ளான பேருந்தில் திருமண விழாவிற்குச் சென்றிருந்த 50க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும், 6 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்தில் இருந்த மீதி பயணிகளின் நிலை என்ன என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அலுவலகம் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், அவர்கள் மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
ஜம்மு காஷ்மீரின் பெரும்பாலான நீர் நிலைகள் வெள்ளம் காரணமாக அபாய அளவைத் தாண்டி உள்ளது. எனவே, பல மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.