4-ஜி இணைப்பு வழங்குவதாகக் கூறி தொழிலதிபரிடம் நூதன முறையில் மோசடி
மும்பை: 4-ஜி இணைப்பு வழங்குவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மும்பையிலுள்ள கேம்ஸ்கார்னர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் செல்போனிற்கு கடந்த ஜூலை மாதம் ஒரு அழைப்பு வந்தது. அப்போது பேசிய நபர், தான் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களது நிறுவனம் சார்பில் குறைந்த கட்டணத்தில் 4ஜி இணைப்பு தருவதாகவும், அதற்காக அவரது பான்கார்டு விபரங்களை தரும்படியும் கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய அந்த தொழிலதிபர், அனைத்து விபரங்களையும் கொடுத்துள்ளார். பின்னர், தொலைத்தொடர்பு நிறுவனத்திலிருந்து வருவதாகக் கூறி இரண்டு ஆசாமிகள் தொழிலதிபர் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, புதிய சிம் கார்டு ஒன்றை கொடுத்ததோடு, 2 மணி நேரத்தில் சிம் கார்டு செயல்படும் என்று கூறியுள்ளனர். மேலும், அவரது பழைய சிம் கார்டை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதனை நம்பிய அவரும் தன்னுடைய சிம் கார்டை கொடுத்துள்ளார். ஆனால் புதிய சிம் கார்டு மறுநாள் ஆகியும் செயல்படவில்லை.
இந்தநிலையில், அவர் அடுத்த நாள் பண பரிவர்த்தனைக்கு முயன்றபோது அவரது இணையதள வங்கி சேவை முடக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய போது, அவரது கணக்கில் இருந்து ரூ.12 லட்சம் வேறு ஒரு வங்கி கணக்கிற்கு இணையதளம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, தொழிலதிபரிடம் சிம் கார்டை வாங்கி சென்றவர்கள் அதை பயன்படுத்தி அவரது இணையவங்கி சேவை மூலம் ரூ.12 லட்சத்தை திருடியது தெரியவந்தது.இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட அபிட் லத்திவாலா, முக்காரன் அப்துல் முன்ஷி, சல்மான் வலோரியா ஆகியோரை கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளியான ஜாமீலை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications