மேகதாதுவை எதிர்க்கும் தமிழக அரசை கண்டித்து கர்நாடகாவில் செப். 26-ல் பந்த்: வாட்டாள் நாகராஜ்
பெங்களூரு: மேகதாது அணை கட்டும் திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசைக் கண்டித்து கர்நாடகாவில் வரும் 26-ந் தேதி பந்த் நடத்தப்படும் என்று கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
இது குறித்து வாட்டாள் நாகராஜ் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடக மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயத்துக்கு மட்டுமில்லாமல் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளது. ஆடு, மாடுகளும் உயிரிழப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவின் நீர் ஆதாரத்தை பாதுகாக்க அரசியல் கட்சியினர் முன்வர வேண்டும்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தினால் பெங்களூரு, மைசூரு, கோலார், சிக்கபளாப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் கிடைக்கும். கடலில் வீணாக கலக்கும் உபரி நீரை தடுத்து குடிநீராக பயன்படுத்த தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதேபோல் வட கர்நாடகாவில் நீர் திட்டங்களை செயல்படுத்த கோவா எதிர்ப்பு தெரிவிக்கிறது. கர்நாடக மாநிலத்தின் நலனுக்கும், நீர் ஆதாரத்திற்கும் தடையாக இருக்கும் கோவா மற்றும் தமிழக அரசுகளைக் கண்டித்தும் கர்நாடகாவில் வருகிற 26-ம் முழு அடைப்பு நடை பெறுகிறது.
கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பாக நடத்தப்படும் இந்த போராட்டத்துக்கு 500-க்கும் மேற் பட்ட கன்னட அமைப்புகளும், லாரி உரிமையாளர் சங்கமும், திரை அரங்கு உரிமையாளர் சங்கமும் முழு ஆதரவு தெரிவித்துள்ளன.
முழு அடைப்பையொட்டி கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு, கோவா மாநிலங்களுக்கு போக்குவரத்து முழுமையாக தடுக்கப்படும். இதேபோல கர்நாடகாவில் இருந்து செல்லும் பால், தயிர், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களும் நிறுத்தப்படும்.
இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.












Click it and Unblock the Notifications