எம்பி, எம்எல்ஏக்கள், வழக்கறிஞராக பணியாற்றலாமா?... பரிசீலிக்கிறது இந்திய பார் கவுன்சில்!
எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கறிஞராக பணியாற்றலாமா என்ற கேள்வி எழுந்துள்ளதையடுத்து இது குறித்து முடிவெடுக்க இந்திய பார் கவுன்சில் 3 நபர் அமைத்து ஆராய்ந்து வருகிறது.
டெல்லி : எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கறிஞராக தொடர்வதற்கு தடை விதிக்கலாமா என்பது குறித்து அறிக்கை தயாரிக்குமாறு 3 நபர் குழு அமைத்து இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசியலமைக்க விதி 14 மற்றும் 15க்கு எதிரானது இது என்று எழுந்த சர்ச்சையை அடுத்து பார் கவுன்சில் இந்த குழுவை அமைத்துள்ளது.
டிசம்பர் 18ம் தேதி இந்திய பார்கவுன்சிலிடம் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தில் பல எம்பி, எம்எல்ஏக்கள் நாடாளுமன்ற/சட்டசபை கூட்டங்களின் போதும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர். இதனால் மக்கள் பிரச்னைகளை எதிரொலிக்காமல் தங்கள் மனுதாரர் தரப்பில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் அவர்கள் வழக்கு விசாரணைக்கு ஆஜராகின்றனர்.
எனவே எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கறிஞராக தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டம் 14 மற்றும் 15க்கு இந்த நடைமுறை எதிரானது என்றும் அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து அறிக்கை தயாரிக்க 3 நபர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்தில் அறிக்கை
"எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கறிஞர்களாக தொடர்ந்து பணியாற்றுவது குறித்து அறிக்கை தயாரிக்க 3 நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கை ஒரு வாரத்தில் என்னிடம சமர்பிக்கப்படும். குழுவினரின் பரிசீலனையில் உள்ளதால் இது குறித்து இறுதி முடிவு எதையும் கூற முடியாது" என்று மிஸ்ரா கூறியுள்ளார்.
அதிக சம்பளம் பெறும் எம்பி, எம்எல்ஏக்கள்
இந்த பிரச்னையை எழுப்பியுள்ளவர் அஸ்வின் உபாத்யாய் இது குறித்து அவர் கூறியதாவது, "மக்கள் பிரதிநிதிகளான எம்பி, எம்எல்எக்கள் நல்ல சம்பளம், இதர படிகள் மற்றும் பணி ஓய்வுக்குகுப் பின்னர் நல்ல பல சலுகைகளையும் பெறுகின்றனர். இந்த சலுகைகள் நீதித்துறையை சார்ந்தவர்களுக்கு கிடைப்பதில்லை,எனவே அவர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் வழக்கறிஞர்களாக பணியாற்றக் கூடாது" என்பதே என்னுடைய கருத்து.
சொந்த பணிகளுக்கு அப்பாற்பட்டு
எம்பி அல்லது எம்எல்ஏ என்பது முழுநேர மக்கள் பணி, அவ்வாறு பணியாற்றாதவர்களை மக்கள் தொண்டாற்றுபவர்கள் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தங்களின் சொந்த வேலைகளுக்கு அப்பாற்பட்டு மக்களுக்காக இந்தப் பிரதிநிதிகள் பணியாற்ற வேண்டும். அதே சமயத்தில் சட்டத்தின் சிறப்புகளும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பிகள் தொடர்ந்து வழக்கறிஞர் பணியில்
அருண்ஜேட்லி, ராம்ஜெத்மலானி உள்ளிட்டோர் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட கின்னர் தங்களது வழக்கறிஞர் பணியை நிறுத்திக் கொண்டனர். ஆனால் காங்கிரஸ் மூத்தத் தலைவர்களான சல்மான் குர்ஷித், கபில் சிபில், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பின்னர் மீண்டும் வழக்கறிஞர் பணியைத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்யசபா எம்பியாக உள்ள கபில் சிபில் அண்மைக் காலமாக பல வழக்குகளில் ஆஜராகி வாதாடி வருகிறார்.