தமிழகத்திற்கு ஒரு துளி தண்ணீர் கூட தர முடியாது - எம்.பி. பாட்டீல் திட்டவட்டம்
பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஒரு துளி தண்ணீர் கூட தர முடியாது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை செயலர் சசிசேகர் தலைமையில் திங்கள்கிழமை காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாது என கர்நாடகம் தரப்பில் கூறப்பட்டது. தமிழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகத்திற்கு கர்நாடகா தர வேண்டிய 64 டி.எம்.சி., தண்ணீரை தந்தே ஆக வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.
இதனை தொடர்ந்து, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வரும் செப்.,21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி கண்காணிப்பு குழு கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவு குறித்து, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது என தெரிவித்தார். இருப்பினும், இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு தான், தண்ணீர் தருவது பற்றி இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் எம்.பி.பாட்டீல் கூறினார்.
இதற்கிடையே, தமிழகத்திற்கு கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளதால், பெங்களூரு நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரில் உள்ள 16 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு வரும் 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.