''கௌன் பனேகா குரோர்பதியில்'' ரூ.1 கோடி வென்ற புற்று நோயாளி
மும்பை: மார்பக புற்றுநோயில் இருந்து குணமடைந்து கல்லீரல் புற்றுநோயால் அவதிப்படும் மேகா பாட்டில் என்பவர் அமிதாப் பச்சன் நடத்தும் கே.பி.சி. எனப்படும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ரூ.1 கோடி வென்றுள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் கௌன் பனேகா குரோர்பதி எனப்படும் கோடீஸ்வரன் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மேகா பாட்டில் என்ற இல்லத்தரசி கலந்து கொண்டார்.
மும்பை வசாய் பகுதியைச் சேர்ந்தவர் மேகா.
ரூ.1 கோடி
அமிதாப் பச்சன் கேட்ட கேள்விகளுக்கு நம்பிக்கையுடன் பதில் அளித்த மேகா ரூ.1 கோடி வென்றார்.
புற்றுநோய்
கடந்த 2008ம் ஆண்டு மேகா மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது அவர் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.
பணம்
நிகழ்ச்சியில் வென்ற பணத்தை வைத்து தனது மருத்துவ செலவுக்காக வாங்கிய கடனை அடைக்கப் போவதாக மேகா தெரிவித்தார். கடனை அடைத்தது போக மீதமுள்ள பணத்தை தற்போது வாங்கும் மருந்துகளுக்கும், குழந்தைகளின் கல்விக்கும் செலவு செய்ய திட்டமிட்டுள்ளார் மேகா.
மகன்
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மேகா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஐ.ஐ.டி.யில் படிக்கும் அவரது மகன் தான் ஊக்குவித்தாராம். பல பொது அறிவு புத்தகங்களை வாங்கி அவர் தனது தாயிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார்.
அமிதாப்
வாழ்க்கையில் நோயுடன் போராடினாலும் துணிச்சலுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேகாவை பார்த்து அமிதாப் பச்சன் நெகிழ்ந்தார்.