அமராவதியில் தலைநகர்.. பார்வையற்றவர் கொடுத்த காசோலை! ஆடிப்போன லோகேஷ்?
ஆந்திரா: அமராவதியில் ஆந்திர மாநிலத்திற்கான தலைநகரை உருவாக்கக் கண் பார்வையற்ற ஒருவர் நிதி அளித்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அவரைப் பாராட்டி அமைச்சர் லோகேஷ் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தை மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு தெலுங்கானா என்றும் ஆந்திரா என்றும் இரண்டாகப் பிரிந்தது. அப்போது ஆட்சியிலிருந்த மன்மோகன் சிங் அரசு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தனது செல்வாக்கை மனதில் வைத்து ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்துவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் ஆந்திராவில் கட்சி ஆட்சியைப் பிடித்தது. தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சி ஆட்சி அமைத்தது. தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்கு இரண்டு மாநிலங்கள் கிடைத்தன. இரண்டு மாநிலங்களும் ஹைதராபாத் நகரத்தைத் தலைநகரமாகக் கொள்ள உரிமை கோரின. ஆனால், ஆந்திராவில் புதிய தலைநகரம் அமைக்கப்படும் வரை ஹைதராபாத் இரண்டு மாநிலத்திற்கும் பொதுவான தலைநகரமாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதனையடுத்து தங்களின் மாநிலத்திற்கு எனத் தனியாக ஒரு தலைநகரை உருவாக்க அன்றைய ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முயற்சியில் இறங்கினார். அமராவதியை ஆந்திராவின் தலைநகரமாக அமைக்கப் பல கோடி செலவில் ஒரு திட்டத்தை உருவாக்கினார். கிட்டத்தட்ட நாயுடு ஆரம்பத்தில் 50,000 கோடி ரூபாய் செலவில் அமராவதியைப் பசுமைத் தலைநகராக உருவாக்கத் திட்டமிட்டிருந்தார்.
அமராவதியைத் தலைநகரமாக ஏற்பதில் கருத்து வேறுபாடு எழுந்தது. ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த பெரும்புள்ளிகள் அந்தப் பகுதியில் உள்ள நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி குவித்துள்ளனர். அதை மிகப்பெரிய முதலீடாக மாற்றவே நாயுடு இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார் என விமர்சனம் எழுந்தது. கடைசியில் தலைநகரம் நாயுடு அரசுக்குத் தலைவலி தரும் நகரமாக மாறியது. இறுதியில் 2019 ஆட்சி அதிகாரத்தை ஜெகன்மோகன் ரெட்டியிடம் பறிகொடுத்தது. இதனால் நாயுடுவின் அமராவதி கனவு முற்றாக முடங்கிப் போனது.
அடுத்ததாக முதல்வராக வந்த ஜெகன்மோகன் ரெட்டி மூன்று நகரங்களை ஆந்திராவின் தலைநகரமாக மாற்றும் திட்டத்தை முன்மொழிந்தார். அதன்படி விசாகப்பட்டினம் அரசு நிர்வாகத்திற்கான தலைநகரமாகவும் அமராவதி சட்டப்பேரவை இயங்கும் தலைநகரமாகவும் நீதித்துறையின் தலைநகரமாக கர்னூல் செயல்படும் என்றும் அறிவித்தார் ஜெகன். எதிர்கால வளர்ச்சியை மனதில் வைத்து ஜெகன் போட்ட திட்டம் சரியானதுதான். ஆனால், அது மக்களைப் பல வழிகளில் அலைக்கழிக்க வைக்கும். ஒருவர் சட்டசபைக்காக ஒரு நகரத்திற்கும் வழக்கு விசாரணைக்காக ஒரு நகரத்திற்கு மாறி மாறி பயணிக்க முடியாது. ஏழை எளிய மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது. எக்கச்சக்கமாகப் பணம் விரயமாகும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்தத் திட்டத்தினை ஒட்டியே விசாகப்பட்டினம் ருஷிகொண்டாவில் மலையடிவாரத்தில் சுமார் 500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி அரசு ரகசியமாக ஒரு பங்களாவைக் கட்டி வந்தது. அது ஜெகன்மோகனின் ஹெஸ்ட் அவுஸ் என்று புதியதாக ஆட்சிக்கு வந்தவுடன் தெலுங்கு தேசம் கட்சியினர் ஒரு செய்தியை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டன. ஆனால், அதற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அது அரசு செலவில் கட்டப்பட்டு வரும் பங்களா என்றும் அது, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகிய உயர் பொறுப்பில் இருப்பவர்கள் வருகை தரும்போது தங்குவதற்கான மாளிகை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதேபோல் கர்னூலில் மிகப்பிரம்மாண்டமாகத் தனது கட்சி அலுவலகத்தைக் கட்டி வந்தார் ஜெகன். அதில் கூட முறைகேடுகள் நடித்துள்ளதாகப் புகார் எழுந்தது. ஆக, மூன்று தலைநகரங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்ட ஜெகன்மோகன் அதற்கு ஏற்ப தனது கட்சி நிர்வாகத்தையும் வசதியாக வைத்துக் கொள்ள திட்டமிட்டிருந்தார் என்பது தெரியவந்தது.
இப்போது புதியதாக ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீண்டும் அமராவதியை தலைநகரமாக அமைக்கும் திட்டத்தைத் தூசி தட்டி கையில் எடுத்துள்ளார். அதற்காகவே ஆந்திராவுக்குத் தனி அந்தஸ்து தர வேண்டும் எனப் பிரதமர் மோடி அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறார். மற்றொரு பக்கம், அமராவதியில் அரசுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதற்கான முதற்கட்ட பணிகள் வேகம் எடுத்து வருகின்றன.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்னதாக, நாயுடு அமராவதி மட்டுமே மாநிலத்தின் ஒரே தலைநகராக இருக்கும் என்றும் மூன்று தலைநகரங்கள் என்பது சும்மா விளையாட்டுத் தனமான விசயம் இல்லை என்றும் அவர் பேசி இருந்தார். கூடவே விசாகப்பட்டினம் பொருளாதார தலைநகராகவும் மேம்பட்ட சிறப்பு நகரமாகவும் உருவாக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில்தான் முதல்வரின் மகன் நாரா லோகேஷை மாற்றுத்திறனாளிகள் சிலரைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அப்போது முற்றிலும் கண்பார்வையை இழந்த ஒருவர் தனது குடும்பத்தாரின் பங்களிப்பாக அமராவதி தலைநகரத்தை உருவாக்க ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை லோகேஷிடம் வழங்கினார். அதைப் பெற்றுக் கொள்ள அமைச்சர் மிக உருக்கமான பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் நாரா லோகேஷ், "இன்று முகேஷ் காசோலையைக் கொடுத்த போது நெகிழ்ந்து போனேன். அவர் மங்களகிரியில் வசித்து வருகிறார். பேணுமகா என்பவரின் மகன் அவர். அமராவதியில் தலைநகரத்தை உருவாக்குவதற்காக அவரது ஓய்வூதியத்திலிருந்து ரூ.10 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். ஆந்திர மக்களின் ஸ்பிரிட் தான் எங்களின் உந்து சக்தி. மிக்க நன்றி அண்ணா. உங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்" என்று அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications