காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கார் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி... திட்டமிட்ட சதியா?
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் திடீரென கார் சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இது எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் இம்மாதம் பல கட்டங்களாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வாக்கு சேகரிக்கும் பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொதுக்கூட்டங்கள் பிரச்சாரங்கள் என தேர்தல் பணிகள் உத்தரப்பிரதேசம் உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களில் களைகட்டியுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம், பத்தின்டாவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஹர்மந்தர் சிங் ஜெசி வாக்கு சேகரித்துக்கொண்டிருந்தார். அப்போது இரவு 8.30 மணி அளவில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மாருதி 800 கார் ஒன்றில் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.
இதில் அப்பகுதியில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என விசாரித்து வருகின்றனர்.