ஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு
கான்பூர்: மாணவர்கள் குளிரில் வாடியதாக தவறான செய்தி அளித்ததற்காக மூன்று பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 'உபி திவாஸ்' எனப்படும் உபி மாநிலம் உருவாக்கப்பட்ட நாளை கொண்டாடும் விதமாக மாணவர்கள் சார்பில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

உ.பி., யில் தற்போது குளிர் கடுமையாக வாட்டி வருவதால், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட நீதிபதி, மாநில அமைச்சர், உள்ளூர் எம்.எல்.ஏ, காவல்துறை அதிகாரிகள் என பெரும்பாலானோர் ஸ்வெட்டர் அணிந்திருந்தனர்.
ஸ்வெட்டர் அணிந்து யோகா செய்ய முடியாது என்பதால், மாணவர்கள் பள்ளி சீருடையுடன் யோக செய்தனர். இந்த செய்தியை எப்படியோ அறிந்த மூன்று பத்திரிகையாளர்கள், 'அதிகாரிகள் அனைவரும் நிகழ்ச்சியில் பிஸியாக இருக்க, அரசு பள்ளி மாணவர்கள் குளிரில் நடுங்கியதாக' செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். தற்போது அவர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கான்பூரில் வசிக்கும் இம்மூன்று பத்திரிக்கையாளர்களும், உள்ளூர் டிவி சேனலில் இந்த செய்தியை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்த மாவட்ட கல்வி அதிகாரி சுனில் தத், "அந்த பள்ளியில் நடந்த குறிப்பிட்ட அந்த நிகழ்வுக்குக் கூட அந்த பத்திரிக்கையாளர்கள் வரவில்லை. ஆனாலும், அவர்கள் "உபி திவாஸ்" நாளுக்காக மாணவர்கள் மேற்கொண்ட 'யோகா மற்றும் உடற்பயிற்சி' திட்டத்தை தவறாக சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
யோகாவை ஸ்வெட்டர் அணிந்து எவரும் செய்ய முடியாது. அதற்கு இலகுவான ஆடைகள் தான் தேவை. இது அடிப்படையான ஒரு விஷயம். அதை முன்னிட்டே, மாணவர்களின் ஸ்வெட்டர் கழட்டப்பட்டது. இது கூட தெரியாமல் அவர்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளனர்" என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக அந்த மூன்று பத்திரிக்கையாளர்கள் மீதும் புகார் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications