ஹர ஹர கோஷம்: மோடி, அமித்ஷா மீது வாரணாசி கோர்ட்டில் வழக்கு
வாரணாசி: "ஹர ஹர மோடி" என்று பாஜகவினர் சரண கோஷம் எழுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியினர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் 'ஹர ஹர மோடி" என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஹர ஹர சரண கோஷம் என்பது இறைவனுக்குரியது. அதை மோடி என்ற தனிநபருக்காக பயன்படுத்தக் கூடாது என்று காசி மற்றும் துவாரகை சங்கராச்சாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மோடியும் தமது ஆதரவாளர்கள் அத்தகைய சரண கோஷத்தை பயன்படுத்தக் கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் இன்று தாக்கல் செய்த வழக்கில், மோடியை சிவபெருமானுக்கு இணையாக சித்தரித்து ஹர ஹர கோஷம் எழுப்புவதன் மூலம் தமது மத உணர்வுகள் புண்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச பாஜக பொறுப்பாளர் அமித் ஷா, வாரணாசி மேயர் ராம் கோபால் மோகலே ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications