பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்... காவிரி குறித்த விவாதம் பட்டியலில் இருந்து நீக்கம்!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்ட விவாதத்தில் இருந்து காவிரி விவகாரம் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டுள்ளது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த விவாதம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் காவிரி விவகாரம் விவாதப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பரிந்துரை குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூடுவதாக தகவல்கள் வெளியாகின. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில் இது குறித்த மத்திய அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று அமைச்சரவையில் எடுக்கப்படும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஒரு புறம் தமிழகம், புதுச்சேரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தயாராகி வருகிறது. மற்றொரு புறம் மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்பிகள் கூண்டோடு தற்கொலை என்று எம்பி நவநீதகிருஷ்ணன் பேச்சு என மத்திய அரசு நெருக்கடியில் உள்ளது.
எனவே காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இந்த அமைச்சரவையில் தெளிவான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சட்டஅமைச்சகத்தின் ஆலோசனைப்படி கடைசி நேரத்தில் காவிரி விவகாரம் தொடர்பான விவாதம் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications