காவிரி: மண்ணை தின்று போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர்.. மண்டியாவில் இன்று பந்துக்கு அழைப்பு
பெங்களூரு: தமிழகத்திற்கு இன்று முதல் 27ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் மீண்டும் தொடங்கி உள்ளது. இதனிடையே மண்டியாவில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
காவிரி நிதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில், காவிரியில் இன்று முதல் 27ம் தேதி வரை 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கெடு விதித்தது உச்சநீதிமன்றம். மேலும், காவிரி வழக்கு மீண்டும் செப்டம்பர் 27ம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் மீண்டும் தொடங்கி உள்ளது. மண்டியாவில் முன்னாள் எம்.பி மாதே கவுடா தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மண்டியாவில் மண்ணை தின்றும், செருப்புகளை தலையில் வைத்து சாலையில் அமர்ந்து கொண்டும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
அதேபோல் மைசூரிலும் கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. குருபூரு சாந்தகுமார் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் பல்வேறு இடங்களில் போராட்டம் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதனிடையே மண்டியாவில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.