காவிரி: வல்லுநர் குழுவை அனுப்புங்க... மத்திய அரசுக்கு கர்நாடகா திடீர் கடிதம்!
பெங்களூர்: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் அரவிந்த் ஜாதவ் மத்திய நீர்வளத் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் (12.96 டி.எம்.சி.) திறந்து விடுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கர்நாடகாவின் மைசூர், மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் கன்னட அமைப்பினர், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கர்நாடக அரசு கனத்த இதயத்துடன் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீரை திறந்துவிட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் அரவிந்த் ஜாதவ் மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசி சேகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மத்திய நீர் வளத்துறை நிபுணர்கள் குழுவை அனுப்பி கர்நாடகா மற்றும் தமிழகத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இந்த ஆண்டு மழை போதிய அளவு பெய்யாததால் குடிக்கவே நீர் இல்லை, இந்நிலையில் தமிழகத்தில் விவசாயத்திற்கு நீர் எப்படி தர முடியும் என்று முன்னாள் பிரதமர் தேவே கவுடா உள்ளிட்டோர் தெரிவித்தனர். இந்நிலையில் தான் நிலைமையை ஆராய நிபுணர்கள் குழுவை அனுப்பி வைக்குமாறு கர்நாடகா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications