தமிழ்நாட்டுக்கு காவிரி நீரா? மண்டியாவில் 50-வது நாளாக 'இடைவிடா' போராட்டம் நடத்திய கன்னட விவசாயிகள்
மண்டியா: காவிரி நதிநீரை தமிழ்நாட்டுக்கு திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று 50-வது நாளாக கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். மண்டியா விசுவேஸ்ரய்யா பூங்காவில் கன்னட விவசாயிகள் நேற்று உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டனர்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடிநீரை திறக்க வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. இதன்படி முழுமையாக காவிரி நீரை திறந்துவிடாமல் இழுத்தடித்து வருகிறது கர்நாடகா. ஒவ்வொரு காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் தமிழ்நாடும் தமக்கான நீர் திறப்பு அளவை வலியுறுத்தினாலும் சொற்ப நீரைத் திறந்துவிடத்தான் மேலாண்மை ஆணையமும் உத்தரவிடுகிறது.

ஆனாலும் கர்நாடகா திறந்துவிடும் குறைவான நீருக்கும் எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மண்டியா பந்த், பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த் என பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இருந்த போதும் காவிரி நீர் திறக்கப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணை உள்ள மண்டியா மாவட்டத்தில் 50 நாட்களாக கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மைசூர்- பெங்களூர் நெடுஞ்சாலையை மறித்தும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மண்டியா போராட்டங்கள் நேற்று 50-வது நாளை எட்டியது. மண்டியா விசுவேஸ்ரய்யா பூங்காவில் விவசாயிகள் வெளியேற மறுத்து உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர். இதனால் மண்டியாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முன்னதாக மண்டியா கல்லூரி மாணவர்கள், விவசாயிகளுடன் போராட்டத்தில் இணைந்தனர். இதேபோல மண்டியா மத்தூர் உள்ளிட்ட பல கிராம மக்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும் மண்டியா போராட்டத்திலும் பங்கேற்று, தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
அத்துடன், இடர்பாடு காலங்களில் காவிரி நீரை எப்படி பகிர்வது என்பது தொடர்பான வரையறையை உருவாக்க மத்திய அரசு தலையிட வேண்டும். அப்போதுதான் காவிரி நதிநீர் பிரச்சனையே முடிவுக்கு வரும். இந்த பிரச்சனை முடியும் வரை எங்களது போராட்டமும் நீடிக்கும் எனவும் கன்னட விவசாயிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications