வழக்கம் போல கூடி கலைந்த கண்காணிப்பு குழு- தமிழகம், கர்நாடகா அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
டெல்லி: தமிழகம், கர்நாடகா அரசுகள் நீர் இருப்பு மற்றும் பகிர்வு குறித்து வரும் 19-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு காவிரி கண்காணிப்புக் குழு எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இன்று கலைந்தது.
தமிழ்நாட்டுக்கு 15,000 கன அடி வீதம் தொடர்ந்து 10 நாட்களுக்கு காவிரியில் இருந்து தண்ணீரை திறந்துவிடவேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவு. இந்த உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடகா நீரை திறந்துவிட்டது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மேலும் இந்த நீர் அளவு போதுமானதாக இல்லை என்றால் தமிழக அரசு காவிரி கண்காணிப்புக் குழுவில் மனு தாக்கல் செய்யலாம் என்றும் இதேபோல் கர்நாடக அரசும் மனுச் செய்யலாம் என்றும், இரு தரப்பு கருத்துகளையும் கேட்டு காவிரி கண்காணிப்புக் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
கண்காணிப்புக் குழுவிடம் மனுக்கள்
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களும் காவிரி கண்காணிப்புக் குழுவிடம் தங்களது கோரிக்கை மனுக்களை தாக்கல் செய்தன. தமிழக அரசின் மனுவில் தற்காலிகமாக 64 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்படவேண்டும் எனவும், கர்நாடக அரசின் மனுவில் தங்களது அணைகளில் மொத்தமே 47 டி.எம்.சி. தண்ணீர்தான் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தன.
புதிய மனு தாக்கல்
காவிரி கண்காணிப்புக் குழுவிடம் கர்நாடக அரசின் சார்பில் நேற்றும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டு இருப்பதாகவும், மேற்கொண்டு தண்ணீர் திறந்துவிட முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறி உள்ளது.
குழுவை அனுப்ப கோரிக்கை
அத்துடன் ஒரு குழுவை அனுப்பி மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு, தமிழகத்தில் காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள நீர்நிலைகளின் நீர் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கர்நாடகத்துக்கும் குழுவை அனுப்பி ஆய்வு செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளது. இந்த ஆய்வுக்கு பின்னரே அடுத்த கட்ட முடிவை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடகம் கோரிக்கை விடுத்து இருக்கிறது.
கண்காணிப்புக் குழு கூட்டம்
இந்த நிலையில் காவிரி கண்காணிப்புக் குழு இன்று டெல்லியில் கூடியது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் தலைமையிலான இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மத்திய நீர்வள ஆணையத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற்னார்.
சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற இக்கூட்டத்தின் முடிவில், தமிழகத்துக்கு கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரின் அளவை கர்நாடகா செப்டம்பர் 16-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல் தமிழகம், கர்நாடகா இரு மாநிலங்களும் கடந்த 9 ஆண்டுகால நீர்ப் இருப்பு, பகிர்வு குறித்து அறிக்கையை செப்டம்பர் 19-ந் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு கலைந்தது.
சுப்ரீம்கோர்ட்டில் மனு
இன்றைய கூட்டத்தில் 4 மாநில அரசுகளின் சார்பில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றை தயாரிக்கும். இது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தமிழக அரசின் இடைக்கால மனு வருகிற 16-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் போது இந்த அறிக்கையை உச்சநீதிமன்றம் பரிசீலித்து முடிவு எடுக்கும்.