கர்நாடகா, தமிழகத்தில் கலவரம்.. தலையிடக் கோரி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
டெல்லி: தமிழகம்-கர்நாடகாவில் அமைதியை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவிலும், தமிழகத்திலும், வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள இந்த மனு, நாளை கர்நாடகாவில் நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்தையும் குறிப்பிட்டுள்ளது.
நிலைமை ஏற்கனவே மோசமாகிவிட்டதாகவும், எனவே இதில் கோர்ட் தலையிட வேண்டியது கட்டாயம் என்று மனுதாரர் கோரிக்கைவிடுத்துள்ளார். இம்மனுவை சுப்ரீம்கோர்ட் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

வன்முறைகள்
நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்னிலையில் நாளை இம்மனு மீது விசாரணை நடைபெற உள்ளது. பெங்களூரில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்டதையடுத்து ராமேஸ்வரத்தில் கன்னடர் தாக்கப்பட்டார். சென்னையில் கன்னடர் ஹோட்டல்கள் மீது கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றது. இதையடுத்து திங்கள்கிழமை பெங்களூரில் மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

பெரும் இழப்பு
பெங்களூரில் இன்றும் ஊரடங்கு உத்தரவு தொடருகிறது. மாநில அரசுக்கு இந்த வன்முறை சுமார் ரூ.25 ஆயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுநல மனு
இந்நிலையி்ல் கன்னியாகுமரியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மீண்டும் சிக்கிய கர்நாடகா
கர்நாடகாவில் நடைபெற்ற பந்த்தை ஏற்கனவே சுப்ரீம்கோர்ட் கடுமையாக கண்டித்திருந்த நிலையில், அதே நீதிபதி பெஞ்சில் நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications