காவிரியில் தண்ணீர் திறப்பு.. கர்நாடகாவில் விவசாயிகள் சாலை மறியல்.. கே.ஆர்.எஸ் அணைக்கு பாதுகாப்பு
பெங்களூர்: தமிழகத்துக்கு கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணையிலிருந்து காவிரி நீரை விடுவிப்பதற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தால், பெங்களூரு-மைசூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நேற்று பாதிக்கப்பட்டது. இதையடுத்து கே.ஆர்.எஸ் அணைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
"பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் விடுவிக்கப்படுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்" என்று மண்டியா கூடுதல் கண்காணிப்பாளர் பி.என். லாவண்யா தெரிவித்தார்.

கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். ஆனால், கே.ஆர்.எஸ் அணையின் சேமிப்பு அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
காவேரி நீராவரி நிகம லிமிடெட் எக்ஸிகியூடிவ் பொறியாளர் கே. பாசவராஜே கவுடா கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்றார்.
ஜூன் 29 அன்று, 3,000 கனஅடி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டது. ஜூன் 30ம் தேதி, கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்புகளும் ஸ்ரீரங்கப்பட்டிணம் பகுதியில் காவிரி ஆற்றின் உள்ளே இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாய அமைப்பின் தலைவர் மாதேகவுடா, கூறுகையில், "எங்கள் விவசாயிகளுக்கு போதுமான அளவு நீர் இல்லாத போது, அதிகமான நீர் விநியோகத்தை அரசாங்க அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும், " என்று கூறினார்.












Click it and Unblock the Notifications