உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி.. பெங்களூரில் செப்.30 வரை நீடிக்கிறது தடையுத்தரவு! போலீஸ் குவிப்பு
பெங்களூர்: காவிரி தொடர்பான விவகாரத்தில் போராட்டங்கள் நடந்து வருவதால் பெங்களூரில் 144 தடை உத்தரவு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு, கர்நாடகா 7 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கர்நாடக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியதோடு, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுவதை நிறுத்திவிட்டது.

இந்த நிலையில், மீண்டும் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டது. கர்நாடக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் சாட்டையை வீசும் என்று எதிர்பார்க்கப்பட்டது, தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிடலாம் என்றும் எதிபார்க்கப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவு கர்நாடகாவுக்கு எதிராக வந்தால் பெங்களூர் மற்றும் காவிரி பாசன பகுதிகளில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதிய போலீசார், மண்டியா, பெங்களூர் ஊரகம், ராம்நகர், மைசூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் பெங்களூரிலும் 144 தடையுத்தரவை இன்று நாள் முழுக்க அமல்படுத்தி இருந்தனர்.
எதிர்பார்த்ததை போலவே நீதிமன்றம், கர்நாடகாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தது. மேலும் 3 நாட்களுக்கு தினமும் தலா 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும் பெங்களூரில் போராட்டம் வெடிக்கவில்லை. மண்டியா, மைசூர் பகுதிகளில் சாத்வீக முறையில் போராட்டம் நடந்து வருகிறது. முன்னதாக கடந்த 12ம் தேதி முதல் 25ம் தேதிவரை பெங்களூரில் 144 தடையுத்தரவு நீடித்தது. இந்நிலையில் பெங்களூரில் வரும் 30 ஆம் தேதி வரை 144 தடையுத்தரவு நீட்டிக்கப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.போரட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications