காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அப்பீலை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம்.. நீதிபதிகள் தீர்ப்பு
காவிரி நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி: தமிழகம், கர்நாடகம் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. காவிரி தொடர்பான மத்திய அரசின் ஆட்சேப மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது.
காவிரி நடுவர் மன்றம் 2007ம் ஆண்டில் வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுக்கள் மீது நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.என்.கான்வால்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தி வந்தது. அப்போது இந்த மனுக்கள் மீதான வழக்கை விசாரிக்கலாமா? இல்லையா ? என விவாதிக்கப்பட்டது.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கான முகாந்திரம் குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த மேல் முறையீடு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கலாமா என்ற மனுவில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதன்படி காவிரி நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கின் கூடுதல் உத்தரவுகள் பற்றி டிசம்பர் 15ம் தேதி பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். டிசம்பர் 15ம் தேதிவரை காவிரியில் தமிழகத்திற்கு விநாடிக்கு 2000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.