ஊழல் அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை!- உச்சநீதிமன்றம்
டெல்லி: ஊழல் வழக்குகள் தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசின் முன் அனுமதி பெற தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஊழல் குற்றம் சாட்டப்பட்ட இணை செயலர் அல்லது அதற்கு மேலான நிலையில் உள்ள அதிகாரிகளிடம் விசாரணையை மேற்கொள்ள சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் மத்திய அரசின் முன் அனுமதி பெறவேண்டும் என்று டெல்லி சிறப்பு போலீஸ் சட்டத்தின் பிரிவு 6ஏ வரையறுத்துள்ளது.

இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில், பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட உயரதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ள மத்திய அரசின் அனுமதி தேவைப்பட்டதால் விசாரணை தாமதப்பட்டு வந்தது.
இதனால் டெல்லி சிறப்பு போலீஸ் சட்டத்தின் 6ஏ பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் மீதான விசாரணை தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், எஸ்.கே.முகோபாத்யாயா, தீபக் மிஸ்ரா, இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் இந்த அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்று இருந்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.வி.விஸ்வநாத் ஆஜர் ஆனார். அவர் வாதாடுகையில், ஊழல் வழக்குகளில் இருந்து அரசு அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என்றார்.
மேலும் உயர் அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது அவருக்கு மட்டுமின்றி அவர் சார்ந்துள்ள துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தான் புகார் மீதான உண்மை நிலையை அறிந்து அதன் அடிப்படையில் மத்திய அரசு விசாரணைக்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் உயர் அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என்றும், இதுதொடர்பான டெல்லி சிறப்பு போலீஸ் சட்டம் 6ஏ பிரிவு செல்லத்தக்கதல்ல என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.
மேலும், "மத்திய அரசில் உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் ஊழல் புரிந்திருந்தாலும் அவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டப்பிரிவு உள்ளது. உயர் அதிகாரிகள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு இத்தகைய பாதுகாப்பு தேவையில்லை.
ஊழல் தடுப்பு சட்டம் என்பது அரசாங்க அதிகாரிகளிடையே நிலவும் ஊழலை ஒழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. எனவே, இவை போன்ற சட்டங்கள் ஊழலை ஒழிக்க வேண்டுமே தவிர, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அதிகாரிகளைப் பாதுகாக்க தேவையில்லை. அரசாங்கம் ஊழலை ஒழிக்க முற்படும்போது, குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் உயர் அதிகாரிகள் அல்லது அல்லது கடைநிலை ஊழியர்கள் என்று வேறுபாடு காணத்தேவையில்லை.
எனவே, இணை செயலாளர் அல்லது அதற்கு உயர்ந்த நிலையில் உள்ள உயர் அதிகாரிகளின் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மத்திய அரசு அனுமதி தேவையில்லை. மத்திய அரசின் அனுமதியின்றி சி.பி.ஐ. அதிகாரிகள் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட உயர் அதிகாரிகளின் மீதான விசாரணையைத் தொடங்கலாம்," என அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. வரவேற்பு
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், "உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். எங்கள் முன் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவாக இறுதி செய்யப்படும். அப்பாவி மக்கள் யாரும் இந்த தீர்ப்பால் பாதிப்பு அடையாத வகையில் செயல்படுவோம்,'' என்றார்.












Click it and Unblock the Notifications