ஏர்செல்லை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க சிவசங்கரனுக்கு தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்தார்: சிபிஐ
டெல்லி: ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய அதன் உரிமையாளர் சிவசங்கரனுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்தார் என்று சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமம் கேட்ட ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க வலியுறுத்தினார் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் என்பது புகார்.
மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் கைமாறியதைத் தொடர்ந்து தயாநிதி மாறனின் சகோதரர் நிறுவனத்தில் மேக்சிஸ் பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்தது என்பதும் குற்றச்சாட்டு.
குற்றப்பத்திரிகை
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சைனி முன்னிலையில்..
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் இக்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
யார்? யார்ர்?
சுமார் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட இக்குற்றப்பத்திரிகையில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனத் தலைவர் டி.அனந்தகிருஷ்ணன், அதன் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோர் மீதும், சன் டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், செளத் ஏசியா என்டர்டெயின்ட்மெண்ட்ஸ் ஹோல்டிங் (மொரீஷியஸ்), அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
இன்று விசாரணை
இன்று இந்த குற்றப்பத்திரிகை மீது விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது மூத்த அரசு வழக்கறிஞர் கே.கே.கோயல் நீதிமன்றத்தில் கூறியதாவது:
நிலுவையில் வைத்த தயாநிதி
சிவசங்கரன் நிறுவனங்கள் குறித்த பல விவகாரங்களை, பிரச்சினைகளை அப்போது தொலைத் தொடர்புத் துறை மத்திய அமைச்சர் பதவியிலிருந்த தயாநிதி மாறன் நிலுவையில் வைத்திருந்தார்..
விற்க வேண்டிய நிலை..
சிவசங்கரனை வர்த்தகம் செய்ய அனுமதிக்காமல் நெருக்கடி கொடுத்தார் தயாநிதி மாறன். சிவசங்கரனின் 3 நிறுவனங்கள் மீதும் தயாநிதி பிடியை இறுக்க, அவரால் வர்த்தகத்தை தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதனால் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லை விற்க வேண்டிய நிலை வந்தது.
ஏன் நெருக்கடி
தயாநிதி மாறன், சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வழங்கியிருந்தால் மலேசிய நிறுவனமான மேக்சிஸ் அதிக தொகை கொடுத்து வாங்கியிருக்க வேண்டியிருந்திருக்கும்.
அதனால் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவதற்கு முன்னரே ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய நெருக்கடி கொடுக்கப்பட்டது.
செப். 22ல் விசாரணை
இவ்வாறு கே.கே.கோயல் வாதிட்டார். இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்,