கலாநிதி, தயாநிதி மாறனுக்கு முன்ஜாமீன் தர அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு- ஆக.27-ல் மீண்டும் விசாரணை
டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்த மனுக்கள் மீதான விசாரணை வரும் 27-ந் தேதி மீண்டும் நடைபெறும் என்று டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி தெரிவித்துள்ளார்.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த 2 நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து சவுத் ஏஷியா எப்எம் லிமிடெட் மற்றும் சன் டிரைக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு ரூ.742.58 கோடி கைமாறியுள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு சார்பில் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கும்படி கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுக்கள் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.கே.மத்தா, முன் ஜாமீன் மனுக்கள் குறித்து அமலாக்கப்பிரிவு சார்பில் பதிலளிக்க கால அவகாசம் வழங்கும்படி நீதிபதியிடம் கோரினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சைனி இந்த வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது கலாநிதி, அவரது மனைவி காவேரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
மேலும் மாறன் சகோதரர்களுக்கு முன் ஜாமீன் தர அமலாக்கத்துறை தரப்பில் மிகக் கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் 27-ந் தேதி நடைபெறும் என்று மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications