கலைஞர் டிவிக்கு சட்டவிரோதமாக பணம் கைமாறியதற்கு தெளிவான ஆதாரம் உண்டு: அமலாக்கப் பிரிவு
டெல்லி: ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்றதற்கு ஆதாயமாக சட்டவிரோதமாக கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி கைமாறியதற்கு தெளிவான ஆதாரங்கள் இருப்பதால் குற்றவாளிகள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று அமலாக்கப் பிரிவு வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்கு ஆதாயமாக கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி ஸ்வான் டெலிகாம் பணம் கொடுத்தது என்பது புகார். இந்த விவகாரத்தில் அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்டுள்ளன என்பது அமலாக்கப் பிரிவு வழக்கு.

இந்த வழக்கில் கலைஞர் டிவியின் இயக்குநரான திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொமொழி எம்.பி, ஸ்வான் பல்வா உள்ளிட்ட 19 பேர் மீது குற்றம்சாட்டி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். தயாளு அம்மாள் உட்பட அனைவருக்குமே ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்தக் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த 18-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது அமலாக்கப் பிரிவு வழக்கறிஞர் கூடுதல் கால அவகாசம் கேட்டார். இதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பான விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற விசாரணையின் போது அமலாக்கப் பிரிவு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், கலைஞர் டிவிக்கு சட்டவிரோதமாக ரூ214 கோடி கைமாறியதற்கு தெளிவான ஆதாரங்கள் உண்டு. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை மறைக்க போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதனால் குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதும் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ராசா,கனிமொழி ஆஜர்
இன்றைய விசாரணையின் போது ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.












Click it and Unblock the Notifications