இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கு: அமித் ஷாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை- சிபிஐ
அகமதாபாத்: குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேர் போலியாக என்கவுன்ட்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அம்மாநில முன்னாள் அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி மும்பையை சேர்ந்த இளம் பெண் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் அம்மாநில போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் 4 பேரும் முதல்வர் நரேந்திரமோடியை கொல்ல வந்த தீவிரவாதிகள் என்று போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் இது போலி என்கவுண்ட்டர் என்ற புகார் எழுந்ததால் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இருப்பினும் இந்த வழக்கில் போலி என்கவுண்ட்டர் நடத்த உத்தரவிட்டவர் என கூறப்பட்ட மாநில முன்னாள் உள்துறை இணை அமைச்சர் அமித் ஷா பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் வழக்கு தொடர்பாக குஜராத்தின் மூத்த அமைச்சர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உரையாடல்கள் அடங்கிய சி.டி. ஒன்று வெளியாகி இருந்தது. இதுபற்றியும் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போதும், அமித்ஷாவை வழக்கில் சேர்ப்பதற்கு போதுமான ஆதாரம் எதுவும் இல்லை என்று அகமதாபாத் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த பாரதிய ஜனதாவின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், உண்மை இப்போது வெளியாகி இருக்கிறது. மோடி மற்றும் அவரது அமைச்சர்களுக்கு எதிராக சிபிஐயை காங்கிரஸ் எப்படியெல்லாம் பயன்படுத்தியது என்ற உண்மையும் வெளியாகிவிட்டது என்றார்.