கொலை மிரட்டல்கள் எதிரொலி.. ராம் ரஹீம் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு இசெட் பிளஸ் பாதுகாப்பு!
டெல்லி: போலி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் மீதான பாலியல் வழக்கில் தீர்ப்பளித்த சிபிஐ நீதிபதி ஜக்தீப் சிங்கிற்கு இசெட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேரா சச்சா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் மீதான 15 வருட கால பாலியல் வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. ராம் ரஹீம் குற்றவாளிதான் என சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜக்தீப் சிங் தீர்ப்பு வழங்கினார். தண்டனை விவரத்தை திங்கள்கிழமை அறிவிப்பதாக அவர் கூறினார்.
ஆனால், அதற்குள்ளாக தேரா சச்சா ஆதரவாளர்கள் பெரும் வன்முறை வெறியாட்டம் நடத்தினர். இதில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்தன. 31 பேர் கொல்லப்பட்டனர்.
கலவரத்தை கட்டுப்படுத்துவதில் ஹரியானா அரசு தவறிவிட்டதாக ஹைகோர்ட் சீறியது. இந்த நிலையில், நீதிபதி ஜக்தீப் சிங், திங்கள்கிழமை ராம் ரஹீம் அடைக்கப்பட்ட சிறையில் தற்காலிக நீதிமன்றத்தை அமைத்து தீர்ப்பு வழங்கினார். சாலை மார்க்கமாக செல்லாமல் ஹெலிிகாப்டரில் நீதிபதி பயணித்தார். ராம் ரஹீம் காட்டுமிராண்டி போல பாலியல் கொடுமைகள் செய்ததாக தீர்ப்பில் குறிப்பிட்டதோடு, 20 வருடம் சிறை தண்டனை விதித்தார்.
நீதிபதிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொலைமிரட்டல்கள் வந்தபடியுள்ளதாம். ராம் ரஹீம் ஆதரவாளர்கள்தான் இவ்வாறு மிரட்டல்கள் விடுப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து நீதிபதிக்கு இசெட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு வளையத்தில், 55 போலீசார், 10 தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் இருப்பார்கள். நீதிபதியோடு அவரது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்குவார்கள்.