கர்நாடகாவை கலக்கும் கள்ள லாட்டரி.. சிபிஐ விசாரணைக்கு சித்தராமையா உத்தரவு!
பெங்களூர்: ஒற்றை இலக்க லாட்டரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஏற்று, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
2007ம் ஆண்டு முதல் கர்நாடகாவில் லாட்டரி விற்பனைக்கு தடை நிலவுகிறது. ஆனால், பாரிராஜன் என்ற லாட்டரி மன்னன் தலைமையில், போலீஸ் அதிகாரிகள் சிலர் துணையோடு கள்ளத்தனமாக ஒற்றை இலக்க லாட்டரி பிசினஸ் நடைபெறுகிறது.

இதுகுறித்து சிஐடி போலீஸ் விசாரணை நடத்தி 6 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இதிலுள்ள தொடர்பை அம்பலப்படுத்தியது. அதில் பெங்களூர் போலீஸ் கூடுதல் கமிஷனர் அலோக்குமாரை கர்நாடக அரசு சஸ்பெண்ட் செய்தது.
இந்நிலையில், லாட்டரி மோசடி பல மாநிலங்களுடன் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாலும், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இதில் தொடர்பிருப்பதாலும், சிபிஐ விசாரணைக்கு, உத்தரவிட கர்நாடக முதல்வர் சித்தராமையா முடிவு செய்தார்.
இன்று மூத்த அமைச்சர்கள் சிலருடன் சித்தராமையா நடத்திய ஆலோசனையின்போது இந்த முடிவுக்கு அவர் வந்தார். இதையடுத்து பத்திரிகையாளர்களுக்கு சித்தராமையா அளித்த பேட்டி:
கர்நாடகாவில் 2007ல் லாட்டரிக்கு தடை விதித்த பிறகு, கள்ள லாட்டரியை ஒழிக்க 2 ஆயிரம் பேர் கொண்ட போலீஸ் படை நியமிக்கப்பட்டது. ஆனால் லாட்டரி விற்பனையை தடுப்பதில் முந்தைய அரசுகள் தோல்வியடைந்தன. குமாரசாமி, எடியூரப்பா, சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆட்சி காலங்களிலும் இந்த லாட்டரி முறைகேடு நடந்துள்ளது. அவர்கள் ஆட்சியில் வழக்குகள் பதிவானதை வைத்து பார்த்தால் இதுதெரியும்.
எனது அரசுதான், அதிவிரைவாக லாட்டரிக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தது. சுவர்ணா செய்தி சேனல் ஸ்டிங் ஆபரேசன் நடத்தி, லாட்டரி விவகாரத்தை அம்பலப்படுத்தியதும், மறுநாளே, நான் சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டேன். ஐஜிபி மட்டத்திலுள்ள அதிகாரியை (அலோக்குமார்) சஸ்பெண்ட் செய்தேன். ஆனால், நடவடிக்கையே எடுக்காத முந்தை ஆட்சியாளர்களோ, கர்நாடக அரசை குற்றம்சாட்டுகின்றனர்.
ஒரு காலத்தில், தேவகவுடா, திருடர்களை பாதுகாக்கும் அமைப்பு என்றும், பாஜகவோ, காங்கிரஸ் பீரோ ஆப் இன்வஸ்டிகேசன் என்றும் சிபிஐ அமைப்பை பார்த்து விமர்சனம் செய்தனர். ஆனால், தற்போது கர்நாடக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க தொடங்கியதும் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க எதிர்க்கட்சிகள் கேட்பதை பார்த்தால், குற்றவாளிகளை காப்பாற்ற முயலுகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. எனது அரசு எந்த குற்றவாளிகளையும் தப்பிக்க விடாது.
இந்த பிரச்சினையை மாநில அரசே விசாரிக்க தகுதியுடையதுதான் என்றாலும்கூட, மக்களுக்கு எங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சிபிஐ விசாரணைக்கு நான் பரிந்துரை செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications