சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும்.. கல்வி வாரியம் அறிவிப்பு
சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை www. cbse.nic.in, www. cbseresults.nic.in. ஆகிய இணையதளங்களில் அறியலாம்.
டெல்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 12ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெற்றன. இத்தேர்வை 11 லட்சம் பேர் எழுதினர். சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் சுமார் 61 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்வதாக சிபிஎஸ்இ அறிவித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் அதை ரத்து செய்வது நியாயமற்ற செயல் எனத் தெரிவித்தது.
இந்த ஆண்டில் புதிய ரத்து முடிவுகள் எதையும் அமல்படுத்த வேண்டாம் எனவும் சிபிஎஸ்இ இயக்குநரகத்துக்கு அறிவுறுத்தியது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து 24ம் தேதி வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
இந்நிலையில் நாளை சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www. cbse.nic.in, www. cbseresults.nic.in. ஆகிய இணையதளங்களில் அறியலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications