சிபிஎஸ்இ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி: சிபிஎஸ்இ ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதிலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 87.56 சதவீதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 77.77 சதவீதமாகவும் உள்ளது.
இத்தேர்வில் டெல்லியைச் சேர்ந்த காயத்ரி 99.2 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், நொய்டாவைச் சேர்ந்த மைதிலி மிஸ்ரா 99 சதவீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும் பெற்றுள்ளனர். காயத்ரி 500க்கு 496 மதிப்பெண்களும், மைதிலி 500க்கு 495 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்வு முடிவுகள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
Congratulations to all my young friends who have successfully passed the CBSE Class XII Board Exam. Best wishes for a bright future.
— Narendra Modi (@narendramodi) May 25, 2015
ஆனால், முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்ததால், தமிழகத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு சிக்கல் உருவாகும் நிலை ஏற்பட்டது.
இதனால் இன்று நண்பகல் 12 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், சிபிஎஸ்இ ப்ளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.