பெங்களூரு குண்டுவெடிப்பு: சிசிடிவி கேமராவில் 4 சந்தேகப் பேர்வழிகளின் உருவம் சிக்கியது!
பெங்களூரு: பெங்களூரு சர்ச் சாலையில் நேற்று இரவு நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் போலீஸாரின் பார்வையில் நான்கு மர்ம நபர்கள் சிக்கியுள்ளனர்.
இந்த நான்கு பேரும் குண்டுவெடிப்புக்கு முன்பு கி்ட்டத்தட்ட முக்கால் மணி நேரம் அப்பகுதியில் சுற்றித் திரி்ந்துள்ளனர். இவர்களின் நடமாட்டம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இவர்களின் நடமாட்டம் சந்தேகத்திற்கிடமான வகையில் இருப்பதால் இவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணையைத் திருப்பி விட்டுள்ளனர்.
சர்ச் சாலையில் பல வர்த்தக நிறுவனங்கள், தனியார் இடங்கள் உள்ளன. அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் ஒரே ஒரு கேமரா மட்டும் வேலை செய்யாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த கேமரா, குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் உள்ள கோக்கோநெட் குரோவ் ஹோட்டலின் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது.
இது சாலையைப் பார்க்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கேமரா மட்டும்தான் வேலை செய்யவில்லை என்று தெரிய வந்துள்ளது. இந்தக் கேமரா மட்டும் வேலை செய்திருந்தால் நிச்சயம் குற்றவாளி அதில் சிக்கியிருப்பான் என்று போலீஸார் நம்புகிறார்கள்.
இருப்பினும் தற்போது கிடைத்துள்ள பதிவுகளை வைத்து யார் அந்த நான்கு மர்ம நபர்கள் என்று போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.