5 மணிக்கு சாலையோரமாக ஜாக்கிங்.. அத்தனை இடம் கிடக்க ஜார்க்கண்ட் நீதிபதி மீது மோதி கொன்ற ஆட்டோ
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த் விபத்தில் இறந்ததை அடுத்து அதன் சிசிடிவி காட்சிகளை பார்த்தால் அவர் திட்டமிட்டு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டதாகவே சந்தேகிக்கப்படுகிறது.
ஜார்கண்ட் மாநிலம் தன்பத் மாவட்டத்தில் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். இவர் தினந்தோறும் உடற்பயிற்சிக்கு செல்வது வழக்கம்.
அது போல் நேற்றைய தினம் காலை 5 மணிக்கு நடைப்பயிற்சிக்கு சென்றார். அவர் 7 மணியாகியும் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே பயங்கர விபத்து.. காரை ஏரியில் இழுத்து சென்ற பேருந்து.. பகீர் கிளப்பும் சிசிடிவி
புகாரின் பேரில்
புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினருக்கு சாலையில் ஒருவர் வாகனம் ஒன்றில் அடிபட்டு இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது அவர் நீதிபதி உத்தம் ஆனந்த் என தெரியவந்தது.
உத்தம்ஆனந்த்
இதையடுத்து அவரது குடும்பத்தினரும் உத்தம் ஆனந்த்தின் உடலை அடையாளம் காட்டினர். இதையடுத்து அவர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
ஆனந்த் ஜாக்கிங்
அதில் நீதிபதி உத்தம் ஆனந்த் ஜாக்கிங் செல்கிறார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று அவர் மீது இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. சாலையின் ஓரத்தில் ஜாக்கிங் சென்றார், சாலையும் அதிகாலை என்பதால் ஆள் நடமாட்டம் இன்றி காணப்படுகிறது.
விசாரணை
அப்படியிருக்க ஓரமாக செல்லும் உத்தம் ஆனந்த் மீது ஆட்டோ மோதியது என்றால் இது விபத்து அல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என நீதிபதி தரப்பினர் கூறுகிறார்கள். போலீஸாரும் இது தொடர்பாக சந்தேகம் அடைந்து அந்த ஆட்டோ டிரைவர் உள்ளிட்டோரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணைக்கு கோரிக்கை
உத்தம் ஆனந்த் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார் என்பதை மற்றொரு ஆட்டோ டிரைவர் போலீஸுக்கு தகவல் அளித்ததை அடுத்து போலீஸார் அவரது உடலை கைப்பற்றியது தெரியவந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் இந்த வழக்கை தாமாக முன் வந்து சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனந்த் கொலை
நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும் இதை பார்க்கும் போது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்றும் பார் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. அது போல் இந்த கொலை சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஜார்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதியை போன் மூலம் தொடர்பு கொண்ட இந்திய தலைமை நீதிபதி ரமணா வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை கேட்டறிந்தார். மேலும் இந்த வழக்கை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. ரவுடிகளுக்கு ஜாமீன் கொடுக்க மறுத்ததால் உத்தம் ஆனந்த் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.