நேபாள நிலநடுக்கத்தால் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: மத்திய அரசு
டெல்லி: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இந்தியாவில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
நேபாளத்தில், நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1800 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவில் 51 பேர் பலியாகியுள்ளதாகவும், 247 பேர் காயமடைந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நேபாள நிலநடுக்கம் இந்தியாவில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் 38 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 11 பேரும், மேற்கு வங்கத்தில் 2 பேரும் என இந்தியாவில் மொத்தம் 51 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
பீகாரில் மாநில அரசு சார்பில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உத்திரப்பிரதேச அரசு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளது.
இந்நிலையில், பீகார், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலநடுக்கதால் பலியானவர்கலின் குடும்பத்திற்கு மத்திய அரசு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளது.