”இனி சீட்டை தேய்த்தால் வேலை காலி”- அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு வார்னிங்!
டெல்லி: திறமையற்ற அரசு அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்யலாம் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களிடையே நேர்மையை உறுதி செய்ய பின்பற்ற வேண்டிய அணுகுமுறை குறித்து மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்கா தலைமையில் சமீபத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் அரசு அதிகாரிகள் நேர்மையும், திறமையும் மிக்கவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அப்படி இல்லாதவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை, அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் ஓர் உத்தரவை அனுப்பி வைத்துள்ளது. அதில், தத்தமது அமைச்சகங்களில் உள்ள நேர்மையற்ற, திறமையாக செயல்படாத ஊழியர்களை அடையாளம் கண்டறியுமாறு கூறியுள்ளது. அத்தகைய ஊழியர்களை, அடிப்படை விதி 56ஜெ யின் கீழ் கட்டாய ஓய்வில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
"35 வயதுக்கு முன்பு பணியில் சேர்ந்து, தற்போது 50 வயதைக் கடந்த எந்த குரூப் ஏ, குரூப் பி ஊழியரையும் தேவைப்பட்டால் பொதுநலன் கருதி கட்டாய ஓய்வில் அனுப்ப மத்திய அரசுக்கு முழு உரிமை உள்ளது" என்று அடிப்படை விதி 56ஜெ கூறுகிறது. குரூப் சி ஊழியரைப் பொறுத்தவரை, 55 வயதைக் கடந்தவரை கட்டாய ஓய்வில் அனுப்பலாம்.
ஆனால், மேற்கண்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு கட்டுப்பாடு உள்ளது. அதாவது, யாருடைய ஆண்டு ஊதிய உயர்வு கடந்த சில ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ளதோ, யாருடைய பதவி உயர்வு, கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோ அத்தகைய ஊழியர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications