மத்திய அரசின் 'ஆலோசனை' இல்லாமல் 7 பேரையும் விடுவிக்கக் கூடாது: உள்துறை அமைச்சகம் கடிதம்
டெல்லி: மத்திய அரசின் ஆலோசனை இல்லாமல் ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை புதன்கிழமை கூடி முடிவு செய்தது.
இது தொடர்பாக மத்திய அரசு 3 நாள்களில் தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கெடு விதித்து கடிதம் அனுப்பியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு நேற்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், ராஜிவ் கொலை வழக்கை மத்தியப் புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி, குற்றவாளிகள் 7 பேருக்கும் தடா சட்டம், ஆயுதச் தடைச் சட்டம் ஆகிய மத்திய அரசின் சட்டங்களின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்ற விசாரணை முறைச் சட்டம் 435- பிரிவின் படி, மத்திய அரசின் ஆலோசனை இல்லாமல் மாநில அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகையால், ஏழு பேரை விடுவிப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு சட்ட விரோதமானது; சட்டப்படி செல்லுபடியாகாது என்பதால் அவர்களை விடுவிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.