இன்று முதல் மேலும் 36 நாடுகளுக்கு இ-விசா வசதி.. மத்திய அரசு நீட்டிப்பு
டெல்லி : தற்போது 67 நாடுகளுக்கு இ-விசா வசதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 36 நாடுகளுக்கு இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் எளிதாக விசா பெறுவதற்கான இ-விசா திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

இதன்மூலம், தனியாக விசா வாங்க தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்து அதிலேயே விசாவை டவுன்லோடு செய்துகொண்டு இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட விமான நிலையங்களில் வந்திறங்க முடியும்.
இந்த வசதி மேலும் 150 நாடுகளுக்கு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று முதல் மேலும் 36 நாடுகளுக்கு இந்த இ-விசா வசதி பயன்பாட்டிற்கு வருகிறது. இதன்மூலம், இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள நாடுகளின் மொத்த எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.
மீதமுள்ள நாடுகளும் இ-விசா திட்டத்தில் இணைக்கப்பட்டு இந்த நிதியாண்டு முடிவதற்குள் அதாவது 2016 ஆம் ஆண்டு மார்ச் 31-ம்தேதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட 150 நாடுகளுக்கும் இ-விசா திட்டம் விரிவுபடுத்தப்பட்டுவிடும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இ-விசா மூலம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்திறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 9 விமான நிலையங்களுடன் இப்போது மேலும் 7 விமான நிலையங்கள் சேர்க்கப்பட உள்ளன. இதில் பிரதமர் மோடியின் தொகுதியில் உள்ள வாரணாசி மற்றும் அவரது மாநிலத்தில் உள்ள அகமதாபாத் ஆகிய விமான நிலையங்கள் இடம்பெறும்.












Click it and Unblock the Notifications