ராஜிவ் வழக்கில் மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு- தீர்ப்பு ஒத்திவைப்பு!

ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பி இருந்தனர்.
ஆனால் இந்த கருணை மனு 11 ஆண்டு கால தாமதத்துக்குப் பின்னர் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து மூவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீது கடந்த 28-ந் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லூத்ரா, தூக்கு தண்டனை குற்றவாளிகளின் கருணை மனு மீது முடிவு எடுக்க தாமதம் ஏற்பட்டால் அதன் அடிப்படையில் தண்டனையை குறைக்கலாம் என ஜனவரி 21ந் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலிக்கிறது என்றார்.
இதையடுத்து கடந்த 29-ந் தேதி வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது மூன்று தமிழர் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பின்னர் இன்றைய தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
தூக்கை ரத்து செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு
இன்று தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதி பெஞ்ச் முன்பு விசாரணண நடைபெற்றது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வாகன்வாதி, மூவரது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கூடாது. கருணை மனுவை தாமதம் செய்வதாலேயே தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கூடாது. இதுபோன்ற வழக்குகளில் தூக்கை ரத்து செய்யக் கோர முடியாது என்று வாதிட்டர்.
இதைத் தொடர்ந்து மூன்று தமிழர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யூகி சவுத்ரி, மூவரும் 20 ஆண்டுகாலமாக சிறையில் இருக்கின்றனர்.. தேவையற்ற காலதாமத்தால் மூன்வரும் பாதிக்கப்படுகின்றனர் என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட மூன்று நீதிபதி பெஞ்ச், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்தி வைத்தது.












Click it and Unblock the Notifications