வருமான வரி விலக்கு பெறும் கறுப்பு ஆடு அறக்கட்டளைகளை களையெடுக்க மத்திய அரசு உத்தரவு
டெல்லி: வருமான வரி விலக்கு பெறும் அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு வரும் பணத்தை முறையாக செலவு செய்கின்றவா என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபடுமாறு வருமான வரித்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆதரவற்ற குழந்தைகள், ஏழைகளுக்கு உதவ தொண்டு நிறுவனம், அறக்கட்டளைகள் மத்திய அரசின் அனுமதியோடு வரி விலக்கும் பெற்று துவங்கப்படுகின்றன. அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை முறையாக செலவு செய்யாமல் வியாபார நிறுவனங்களாக மாறிவருகின்றன என்று மத்திய அரசுக்கு புகார் சென்றுள்ளது.
வெளிநாட்டு நிதி பெற்று முறைகேடாக செயல்பட்ட தனியார் தொண்டு நிறுவனங்கள் பற்றி மத்திய அரசுக்கு புகார் சென்றது. இதையடுத்து விசாரணை நடத்தி அவற்றின் நிதி ஆதாரங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் அறக்கட்டளைகளையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
மத்திய நிதித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நேரடி வரிகள் வாரியம் வரித்துறை அதிகாரிகளுக்காக தயார் செய்துள்ள அறிவுரை அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கறுப்பு ஆடுகள்
வருமான வரி விலக்கு பெறும் கறுப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டியது, அதிகாரிகளின் கடமை. அது, எளிதானதல்ல. வெள்ளையான தோற்றத்தை கொண்டுள்ள அந்த ஆடுகள், அசந்தால், வருமான வரித்துறையினரின் முகத்தையே மேய்ந்து விடும். அத்தகைய முறைகேடான அமைப்புகள், எந்தெந்த விதங்களில், தொண்டு நிறுவன நன்கொடைகளை தவறாக பயன்படுத்துகின்றன என்பதை துல்லியமாக ஆராய்ந்து, அவற்றை சட்ட நடவடிக்கையில் சிக்க வைக்க வேண்டும்.

தொண்டு நிறுவனங்கள்
தொண்டு நிறுவனங்கள், தொண்டுகள் புரிவதையே கடமையாக கொண்டிருக்க வேண்டும். அத்தகைய செயல்பாடு இல்லாத அமைப்புகள், தொடர்ந்து வரிச்சலுகை பெறவோ, பெற்ற நன்கொடையை தவறாக பயன்படுத்தவோ அனுமதிக்கக் கூடாது.

ஊக்கம்
சட்டத்திற்கு உட்பட்டு, முறையான விதத்தில் செயல்படும் அறக்கட்டளைகளை ஊக்கப்படுத்துவதும், வரித்துறை அதிகாரிகளின் முக்கிய கடமை. அத்தகைய அமைப்புகளுக்கு, சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து சலுகைகளும், உதவிகளும் வழங்கப்பட வேண்டும். ஆனால், எந்த காரணத்தை கொண்டும், முறைகேடான நிறுவனங்களின் மோசடியை அனுமதிக்கக் கூடாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிதி
வெளிநாடுகளில் இருந்து பெற்ற நிதிக்கு கணக்கு காட்டாத, மத்திய-மாநில அரசுகளிடம் இருந்து பெறும் சலுகைகளை தவறாக பயன்படுத்திய 4 ஆயிரத்து 470 அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை மத்திய அரசு நேற்று முன்தினம் ரத்து செய்தது. முன்னதாக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை மத்திய அரது அதிரடியாக ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications