இதான் முக்கியமான கட்டம்.. நாளை LOI.. 3ல் 2 பங்கு தூரத்தை கடந்த சந்திரயான்-3.. இஸ்ரோ கொடுத்த அப்டேட்!
ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 நிலவை நோக்கிய பயணத்தில் மூன்றில் 2 பங்கு தூரத்தைக் கடந்துவிட்டது என்றும், சந்திரயான் 3 நாளை மாலை 7 மணிக்கு நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் செல்லும் முக்கிய கட்டத்தை நெருங்குகிறது என்றும் இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை 14-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு மேற்கொள்வதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் ரூ.615 கோடியில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை படிப்படியாக அதிகரித்து நிலவை நெருங்கிச் சென்று கொண்டிருக்கிறது.

பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை 26 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5-வது முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது.
அடுத்தகட்டமாக சந்திராயன்-3 பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடர ஆரம்பித்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி நள்ளிரவு 12.05 முதல் சந்திரயான் 3 விண்கலம் புவிவட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளுவதற்கான உந்து விசை செலுத்தப்பட்டது.
தற்போது சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்துள்ளது. லூனார் ஆர்பிட் இன்ஜெக்ஷன் (LOI) நாளை (ஆகஸ்ட் 5 ஆம் தேதி) இரவு சுமார் 7 மணிக்கு நடைபெற உள்ளது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, நிலவின் சுற்றுப்பாதையில் நாளை முதல் சந்திரயான் 3 பயணிக்கத் தொடங்கும்.
சந்திரயான்-3 நிலவுக்கு மிக அருகில் இருக்கும் போது இது நடைபெறும். ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-3 லேண்டரை சாஃப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்க உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications