சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தல் 2023 .. விறுவிறுப்பாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சட்டசபைக்கு இன்றைய தினம் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி 70.50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 70 தொகுதிகளில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
சத்தீஸ்கர் சட்டசபைக்கு 90 தொகுதிகள் உள்ளன. இங்கு நவம்பர் 7 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அந்த 20 தொகுதிகளில் நக்ஸல் பகுதியான பாஸ்டர் பகுதியும் அடங்கும். கடந்த 2018ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 17இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் ஒரு இடத்திலும் வென்றது.

இந்த முதல் கட்ட தேர்தல் அன்று நக்ஸலைட்டுகளால் சுக்மா மாவட்டத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதையடுத்து பனாவர் கிராமத்திலும் பாண்டா வாக்குச் சாவடியையும் சுற்றியும் என்கவுன்ட்டர்கள் நடந்தன. இந்த தேர்தலில் 70.87 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக இன்றைய தினம் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி 70.50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சத்தீஸ்கர் முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 40,78,689 பேர் வாக்காளர்கள். இவர்களில் பெண் வாக்காளர்கள் 20,84,675 பேர்; ஆண் வாக்காளர்கள் 19,93,936; 69 பேர் மூன்றாம் பாலினத்தவர். மொத்தம் 1,64,299 பேர் முதல் முறையாக வாக்களிக்கும் புதிய வாக்காளர்கள் உள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருமுனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் இடையே கடும் போட்டி உள்ளது. மாநில முதல்வராக காங்கிரஸின் பூபேஷ் பாகல் பதவியில் உள்ளார். சத்தீஸ்கர் மாநில முதல் கட்ட தேர்தலில் 223 பேர் வேட்பாளர்கள். இவர்களில் 25 பேர் பெண்கள். நவம்பர் 7ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் 20 தொகுதிகளில் 13 தொகுதிகளில் பழங்குடிகள், தலித் தொகுதிகள். இந்த தொகுதிகளில் 6 சிட்டிங் எம்.எல்.ஏக்கள் போட்டியிட்டனர்.
இன்றைய தினம் 70 தொகுதிகளில் 958 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 827 பேர் ஆண்கள், 130 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை. இந்த தேர்தலில் சில தொகுதிகளில் பாஜக காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவும். பதான் சட்டசபை தொகுதியில் மாமா முதல்வர் பூபேஷ் பாகலுக்கும் மருமகன் விஜய் பாகலுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்கள் இருவரும் இதுவரை 3 முறை போட்டியிட்டுள்ளனர். 2003, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் 2008 இல் மட்டுமே பூபேஷை விஜய் வென்றுள்ளார்.
பூபேஷ் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் பதான் தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். அம்பிகாபூரில் சத்தீஸ்கர் துணை முதல்வரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான டி.எஸ். சிங் தேவ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக தலைவரும் தொழிலதிபருமான ராஜேஷ் அகர்வால் போட்டியிடுகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தேவ்தான் 3 முறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்து வருகிறார். அவர்தான் சத்தீஸ்கரின் பணக்கார எம்எல்ஏ ஆவார்.
சீதாபூரில் உணவு மற்றும் கலாச்சார துறை அமைச்சர் அமர்ஜீத் பாகத்தும் பாஜக தலைவர் ராம் குமார் டோப்போவுக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது. அது போல் கார்சியாவில் சத்தீஸ்கரின் விளையாட்டு மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் உமேஷ் படேலுக்கும் பாஜக தலைவர் மகேஷ் சாஹுவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இப்படியாக மொத்தம் 15 தொகுதிகளில் நட்சத்திர போட்டியாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த மாநிலத்தில் முக்கிய பிரச்சினைகளாக ஊழல், விவசாயிகளின் பிரச்சினை, பழங்குடியினர் பிரச்சினை , நக்ஸலைட்டுகள் பிரச்சினை ஆகியவை ஆகும்.












Click it and Unblock the Notifications