ஒரு குடைக்குள் பள்ளி.. புதிய கல்வி பாதையின் அடையாளம்.. பாராட்டுகளைக் குவிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ருத்ரா ராணா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் கிராமம் கிராமாகச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் கிராமம் கிராமாக சென்று, ஆன்லைனில் படிக்க முடியாத மாணவர்களுக்கு பாடம் நடத்தி பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இப்போதைக்கு பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றன. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பெரிய அளவில் பிரச்சினை இல்லை என்றாலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் பெரும் சவாலாகவே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு என்பது பெரும் துன்பமாக இருந்து வருகிறது.

ருத்ர ராணா
இதனை புரிந்துகொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் கிராமம் கிராமாகச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். அம்மாநிலத்தின் கொரியா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ருத்ர ராணா என்பவர் தான் அந்த ஆசிரியர்.

மணியோசை
ஒரு கரும்பலகை, பெரிய குடை, சாக்பீஸ், அட்டைப் படங்கள் சகிதம் கிராமம் கிராமமாக தனது பைக்கிலேயே சென்று பாடம் நடத்தி வருகிறார் ருத்ர ராணா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்திற்குச் செல்லும் ராணா, அங்கு சென்றதும் பள்ளியில் அடிப்பது போல மணியோசை எழுப்புகிறார். அதைக் கேட்டதும் மாணவர்கள் அனைவரும் அவர் இருக்கும் இடத்திற்கு வந்து ஆஜாராகி விடுகின்றனர்.

மாணவர்கள் மகிழ்ச்சி
நிழல் உள்ள இடங்களில் தகுந்த சமூக இடைவெளியுடன் மாணவர்களை அமரச் செய்து, குடைக்கு கீழ் கரும்பலகையை நிறுத்தி பாடம் நடத்துகிறார் ராணா. இதன் மூலம் பள்ளியை மாணவர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கிறார் அவர். இதன் மூலம் தாங்கள் மிகவும் பயனடைவதாக கூறுகிறார்கள் மாணவர்கள்.

நல்ல முயற்சி
"ராணா சார் எங்களுக்கு விதவிதமான பாடங்களை கற்றுக்கொடுக்கிறார். அவர் சென்ற பிறகு நாங்களே அதைப் படித்து கொள்வோம். பள்ளிக்கு செல்லாமல் இருப்பது கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனால் இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது", என்றார் சூரஜ் எனும் மாணவர்.

புதிய கல்வி பாதை
"எனது பைக்கில் இருக்கும் குடை ஒரு புதிய கல்வி பாதையின் அடையாளமாக இருக்கிறது. மேலும் மழை, வெயிலில் இருந்தும் அது என்னை காப்பாற்றுகிறது. எனது இந்த முயற்சியின் மூலம் மாணவர்களுக்கு பள்ளிகளில் நடத்துவது போன்றே பாடம் எடுக்க முடிகிறது. இது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது", என்கிறார் ஆசிரியர் ராணா.

ஆன்லைன் வகுப்புகள்
ருத்ர ராணாவை போன்ற ஒரு சில ஆசிரியர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரின் மாணவர்களைத் தேடிச் சென்று பாடம் நடத்துகின்றனர். ஆனால் பல ஆசிரியர்கள் உயிர் பயத்தால் சம்பளத்தை மட்டும் வாங்கிக்கொண்டு இன்னமும் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். ராணாவை போல் அனைவரும் முயற்சித்தால், ஆன்லைன் வகுப்புகள் எட்டாத இடங்களில் உள்ள மாணவர்களும் கூட தங்களது கல்வியைத் தடையின்றி தொடர முடியும்.












Click it and Unblock the Notifications