சென்னை டூ ஹைதராபாத் ஆம்னி பஸ்சில் தீ... பெண் பயணி உஷார்படுத்தியதால் 38 பயணிகள் தப்பினர்!
ஹைதராபாத்: சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்குச் சென்ற ஆம்னி பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்வடசமாசக அதிகாலையில் பஸ்சில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஒரு பெண் இதைப் பார்த்து அனைவரையும் உஷார்படுத்தியதால் பஸ்சில் இருந்த 38 பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஹைதராபாத்துக்கு ராபாத்துக்கு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்தப் பேருந்து நேற்று அதிகாலையில், பிரகாசம் மாவட்டம் சங்கலு என்ற கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பஸ்சின் பின்பகுதியில் இருந்து ‘குபு குபு'வென புகை வரத் தொடங்கியது. அப்போது மணி 2 ஆகும்.
அந்த சமயத்தில் ஒரு பெண் பயணி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பஸ்சின் பின்பகுதியிலிருந்து புகை வருவதைப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்து அனைவரையும் எழுப்பினார். டிரைவரையும் உஷார்படுத்தினார். இதையடுத்து டிரைவர் பஸ்சை வேகமாக சாலையோரமாக நிறுத்தினார். அனைவரும் கீழே இறங்கினர். அவர்கள் இறங்கிய சிறிது நேரத்திலேயே பஸ் முழுவதும் தீ பரவி முழுவதுமாக கருகிப் போனது.
நல்ல வேளையாக அந்தப் பெண் மட்டும் உஷார்படுத்தாமல் இருந்திருந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். பஸ்சின் பின்பகுதியில்தான் லக்கேஜ் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு புதுப் பெண்ணின் நகைகளையும் வைத்திருந்தார். அது முழுவதுமாக கருகிப் போய் விட்டது.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஆம்னி பஸ் நடுச் சாலையில் தீயில் கருகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்துப் பயணிகளையும் உஷார்படுத்தி பெரும் உயிர்ச் சேதத்தைத் தடுத்த அந்தப் பெண் பயணியை அனைவரும் பாராட்டினர்.