சென்னை குண்டு வெடிப்பு: பெங்களூருவில் 2 பேர் கைது!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு தொடர்பாக பெங்களூருவில் 2 சதிகாரர்களை போலீசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மே 1- ந் தேதி காலையில் 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஸ்வாதி என்ற இளம்பெண் பலியான நிலையில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரயிலில் குண்டுவெடித்த பெட்டிகளில் கடந்த 2 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். மற்றொரு பிரிவு சூப்பிரண்டு அன்பு தலைமையில் நேற்று முன் தினமே பெங்களூர் சென்றது ஒரு குழு.
அங்கு பெங்களூர் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டிருந்த நடைமேடையில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். இந்நிலையில் சென்னை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 2 பேர் பெங்களூரில் சிக்கியுள்ளனர்.
மத்திய உளவு பிரிவினர் மேற்கொண்ட ரகசிய விசாரணையில் இவர்கள் இருவரும் பிடிபட்டுள்ளனர். இந்த 2 பேரும் குண்டு வெடிப்பு சதிகாரர்களுக்கு உதவிகள் செய்தார்களா? அல்லது குண்டு வெடிப்பு நாசவேலையில் நேரடியாக ஈடுபட்டார்களா?என்பது குறித்து விசாரணை ந்டைபெற்று வருகிறது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. கரன்சின்கா பெங்களூருக்கு விரைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications