இந்தியா அழைத்து வரப்பட்டார் சோட்டா ராஜன்... டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
டெல்லி: இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட நிழல் உலக தாதா சோட்டா ராஜனை சிபிஐ அதிகாரிகள் டெல்லி அழைத்து வந்துள்ளனர். இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் நிழல் உலக தாதாவாக விளங்கியவர் சோட்டா ராஜன் (55). இவர் மீது 70க்கும் அதிகமான கொலை, கடத்தல் வழக்குகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென இந்தியாவில் இருந்து, சி.பி.ஐ., மற்றும் மும்பை போலீசார் அடங்கிய குழு, இந்தோனேஷியா சென்றது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சோட்டா ராஜனை இந்தியா அனுப்ப இந்தோனேஷியா சம்மதித்தது.
ஆனால், சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வர இயற்கை ஒத்துழைக்கவில்லை. எரிமலை சீற்றம் காரணமாக பாலியில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது.
நேற்று நிலைமை சீரானதைத் தொடர்ந்து சோட்டா ராஜனை அழைத்துக் கொண்டு சிபிஐ அதிகாரிகள் தனி விமானத்தில் இந்தியா புறப்பட்டனர். இன்று காலை 5.45 மணியளவில் அவர்கள் டெல்லி பாலம் விமான நிலையத்தை வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து சோட்டா ராஜனை சிபிஐ அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இன்று அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சோட்டா ராஜன் அழைத்து வரப்பட்டதால் டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அதோடு, சோட்டா ராஜன் வைக்கப்பட்டுள்ள இடம் மட்டுமின்றி, டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாவூத் கோஷ்டியால் ராஜனுக்கு ஆபத்து இருப்பதால் இவ்வாறு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications