ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய ப.சிதம்பரம்.. பண மதிப்பிழப்பு விவகாரத்தில் ஆவேசம்
டெல்லி: பண மதிப்பிழப்பு தொடர்பாக உரையாற்றிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மோடியை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
டெல்லியில் இன்று காங்கிரஸ் சார்பில் நடந்த ஜன்வேதனா என்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சிதம்பரம், பண மதிப்பிழப்பு தொடர்பான விவாதம் நடைபெற்றதாக அமைச்சரவை குறிப்புகளில் இல்லை. அதேபோல நவம்பர் 7ம் தேதிதான் ரிசர்வ் வங்கிக்கு அரசு இத்தகவலை தெரிவித்துள்ளது. 8ம் தேதியே அறிவித்துள்ளது. ஒரு நாளில் ரிசர்வ் வங்கி எப்படி ஆலோசனை நடத்தி அரசுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கும்?
மேலும் ரிசர்வ் வங்கிதான் அரசுக்கு ஆலோசனை வழங்கி அனுமதி கேட்பது வழக்கமே தவிர, இவ்வாறு அரசு ரிசர்வ் வங்கிக்கு ஆலோசனை வழங்கியது புதிய நடைமுறையாகும். ஒரு தனி மனிதரின் முடிவால், இந்தியாவிலுள்ள மொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோடி அறிவிப்பால் 70 நாட்களுக்கும் மேலாக வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும். மொத்த உள் நாட்டு உற்பத்தியில் பெரும் பின்னடைவை இந்தியா சந்திக்க உள்ளது. நாட்டுக்கு இதனால் 1.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட உள்ளது என்றார்.
மேலும் பேச்சின்போது, மோடியை Führer என்ற வார்த்தையால் அழைத்தார் சிதம்பரம். இந்த வார்த்தைக்கு ஜெர்மன் மொழியில் தலைவர் என பொருள் இருந்தாலும், இது அந்த நாட்டை சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லரை குறிக்க பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்.
கார்டுகளை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்ய சொல்ல மோடிக்கு அதிகாரம் கிடையாது. பணமோ, கார்டோ அது என்னுடைய முடிவாகத்தான் இருக்க வேண்டும். ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற நாடுகள் கூட 80 சதவீதத்திற்கும் மேல் பரிவர்த்தநைகளை பணத்தில் செய்கின்றன. உலகமே பணத்தின் பக்கம்தான் போகிறது. இந்தியாதான் நேர் எதிராக போய்க்கொண்டுள்ளது. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.