ராஜிவ் மீது அபாண்ட குற்றச்சாட்டு.. சுஷ்மா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க ப.சி. வலியுறுத்தல்!
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
தேடப்படும் குற்றவாளியான ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும் என்பது காங்கிரஸின் தொடர் கோரிக்கை. இது தொடர்பாக லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுஷ்மா முன்வைத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:
லலித்மோடி விசா பெற்ற விஷயத்தில் சுஷ்மா தலையிட்டுள்ளார் என்பதை மறுக்க முடியாது. லலித் மோடிக்கு உதவியது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக சுஷ்மா ஸ்வராஜ் உபதேசம் செய்து இருக்கிறார். அவர் உண்மைகளை மறைத்து காங்கிரஸ் மீது அபாண்டமாக குற்றம்சாட்டி இருக்கிறார்.
கேள்விகளுக்கு பதில் எங்கே?
மனிதாபிமான அடிப்படையில் சுஷ்மா உதவியது உண்மையெனில், போர்ச்சுகல் செல்வதற்கு மட்டும் செல்லத்தக்க தாற்காலிக பயண ஆவணம் கேட்டு லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தாதது ஏன்?
இந்திய ஆவணத்துக்குப் பதிலாக இங்கிலாந்து அரசின் ஆவணம் பெறுவது லலித் மோடிக்கு உதவிகரமானதாக இருக்கும் என சுஷ்மா கருதியது ஏன்? லலித் மோடிக்கு உதவி செய்தது பற்றி தனது அமைச்சகத்துக்கு தெரிவிக்காமல் இருந்தது ஏன்?
தொடர்ந்து கேட்போம்
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு, உண்மையை சொல்வதற்கு பதில் வெற்று பேச்சுதான் பேசியிருக்கிறார் சுஷ்மா. லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மாவிடம் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கும்.
அபாண்டமாக..
குவாத்ரோச்சியிடம் இருந்து ராஜிவ் காந்தி பணம் பெற்றதாக முற்றிலும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டை சுஷ்மா ஸ்வராஜ் கூறி உள்ளார். இது காங்கிரசாரை காயப்படுத்தியுள்ளது. இதற்கு நாங்கள் எங்களுடைய கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.
மன்னிப்பு கேட்க வேண்டும்....
ராஜிவ் காந்தி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும் முன் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கு பற்றிய விவரங்களை நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் அவர் ஏன் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை? அப்படி அவர் கேட்டு இருந்தால், உண்மையை அறிந்து அதிர்ச்சி அடைந்து இருப்பார்.
அந்த வழக்கின் தீர்ப்பு பற்றிய விவரத்தை அறியாமலேயே சுஷ்மா ஸ்வராஜ் பேசி இருக்கிறார். இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.