தலைமை தேர்தல் ஆணையரை நெருங்கிய ஆபத்து.. அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்! என்ன நடந்தது? பரபரப்பு
டேராடூன்: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி மற்றும் 47 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார். இந்நிலையில் தான் உத்தரகாண்ட் மாநில பயணத்தின்போது ராஜீவ் குமார் பயணித்த ஹெலிகாப்டரில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்று மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் தேதியை அவர் அறிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு நவம்பர் 13, நவம்பர் 20 என 2 கட்டமாகவும், மகாராஷ்டிராவுக்கு நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
அதேபோல் 47 சட்டசபை தொகுதிகளுக்கும், வயநாடு லோக்சபா தொகுதிக்கும் நவம்பர் 13ம் தேதியும், கேதார்நாத் மற்றும் நாண்டன் லோக்சபா தொகுதிகளுக்கு நவம்பர் 20ம் தேதியும் இடைத்தேர்தல்கள் நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்பிறகு மொத்தமாக நவம்பர் 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.
இந்நிலையில் தான் உத்தரகாண்ட்டில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஹெலிகாப்டரில் பயணம் செய்தார். அவருடன் உத்தரகாண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விஜய் குமார் உள்பட சிலர் பயணித்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் சட்டசபை தொகுதி உள்ளது.
இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த பாஜக எம்எல்ஏ சைலா ராவத் கடந்த ஜூலை மாதம் காலமானார். இவரது மறைவை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து தேர்தல் நடவடிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று ஹெலிகாப்டரில் அங்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று வானிலை மாறியது. மோசமான வானிலை நிலவியது. மேற்கொண்டு பயணித்தால் ஹெலிகாப்டரில் விபத்தில் சிக்கலாம் என்று பைலட் எச்சரித்தார். இதையடுத்து உடனடியாக பாதிவழியில் பிதோராகார்க் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உள்பட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.












Click it and Unblock the Notifications